
கோவிலில் காண்டாமணியோசை கேட்கின்றது, இன்றைக்கு கோவில் தீர்த்தமல்லே, நேரத்துக்குப் போனால்த் தான் சுவாமி பூசையையும் பார்த்திட்டு தீர்த்தமாடப் போகலாம், சுனாமிக்குப் பிறகு கடற்கரைக்குப் போகவே பயமாக இருக்கு, சுனாமி அடிச்சதில கடற்கரையில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு எதுவித வீடு மனையும் மிஞ்சல்ல, ஆனா இந்த கோவில் மட்டும் மிஞ்சி இருப்பது அந்த முருகனில் செயல் தான், ஒரு கல் கூட அசையல்லையே! தமையன் கந்தவனத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் விசாலாட்சி, முருகா... முருகா... எல்லோரையும் பிரச்சனை ஒண்டும் இல்லாமல் காப்பாத்தப்பா...
சுனாமியின் தாக்கத்தில் கணவனை இழந்தவள் தான் விசாலாட்சி, வெளிநாட்டிலுள்ள மூன்று பிள்ளைகளும் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு வருமாறு அழைத்தும், கணவன் மரித்த இந்த மண்ணை விட்டு எங்கும் சென்று வாழ்வதற்கு விருப்பமற்றவளாய் கிராமத்திலே வாழ துணிந்து விட்டாள் விசாலாட்சி, இங்கே சகோதரனும் தனித்து வாழ்வதனால் தான் பிள்ளைகளிடம் போய் விட்டால் அண்ணையும் தனித்துப் போவாரே எனும் கவலையினால் இங்கே வாழ முடிவு செய்து விட்டாள்.
என்ன அண்ண நேரமாகுதல்லே, எழும்பி வெளிக்கிடுங்கோ, கோயிலுக்குப் போட்டு வருவம், சுவாமி தீர்த்தமாடி வந்ததும் கோயிலில் அன்னதானம் கொடுப்பினம், அங்கேயே சாப்பிட்டு வருவம் என்ன, ஓம் பிள்ளை எனக்கும் அன்னதானத்தில் சாப்பிட நல்ல விருப்பம், வருசத்துக்கு ஒரு தரம் அந்த முருகன் சன்னிதானத்தில் இருந்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் ஒரு சந்தோசம் தான், என்ன விசாலி, அப்ப போட்டு வருவம் வாரும்.
அரோகரா அரோகரா... சத்தம் வானைப் பிளக்க எங்கும் பக்தர்கள் கூட்டம், ஆண்கள் வெள்ளை வேட்டி அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் தமிழரின் கலாசாரப் பண்பாட்டைக் காப்பாற்றும் ஒரே இடம் கோவில் எனச் சொல்லும் அளவுக்கு அழகாகக் காணப்பட்டது கோவில் வளாகம், கால் வைக்க இடமில்லை, ஒரே சனக் கூட்டம், முருகனின் திருவிளையாடல் தான் என்னவோ இன்று வானமும் மப்பும் மந்தாரமாக இருக்கிறது, இதனால் வெய்யிலின் அகோரம் குறைந்து சாதகமான காலநிலையாக இருக்கிறது. அங்கப் பிரதட்சணை செய்வோர், அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் செய்வோர், காவடியாடுவோரென கோவிலில் இட நெருக்கடியாக இருக்கிறது, கற்பூரம் கொழுந்து விட்டு எரிகின்றது. அரோகரா அரோகரா... பூசகரின் தீப ஆராதனையைக் கண்டதும் பக்தர்கள் கரங்களை தலைக்கு மேல் தூக்கி முருகனை வணங்குகின்றனர்.
கோவிலின் வெளி வளாகத்தில் வரிசையாகக் கடைகள், அந்தக் கடைகளில் சனக் கூட்டம் அதிகமாக உள்ளனர், இளைஞர்கள் ஐஸ்கிறீம் வண்டிகளுக்கு அருகில் நின்று குளிர்களி உண்டு மகிழ்கின்றார்கள், அன்னதானத்துக்குரிய சமையல் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறன, அதனால் அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காணப்படுகின்றது. கண்களைக் கசக்கிக் கொண்ட கந்தவனம், கடற்கரையை நோக்கி தீர்த்தமாடச் செல்லும் சுவாமியின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார், அர்ச்சகரின் சமஸ்கிருத அர்ச்சனை, ஓதுவார்களின் தெய்வீகப் பாடல்கள், ஊதுபத்தியின் நறுமணம் போன்றவையால் அவ்விடம் இறை சிந்தனை கொண்ட களமாக விழங்கியது.
கடல் அமைதியாக சுவாமியின் வருகைக்காகக் காத்திருப்பது போன்று தெரிகின்றது, அடியார்கள் சுவாமியின் தீர்த்தமாடலைத் தொடர்ந்து கடலில் இறங்கித் தீர்த்தமாடுகின்றனர், எங்கும் அரோகரா அரோகரா எனும் சத்தமே கேட்கின்றது.
அந்த பக்தி பூர்வமான நேரத்தில் ஓர் வெடிச் சத்தம் கேட்டது, நிசப்தம் குடி கொண்டது, சிலர் வேகமாகப் பின் வாங்கினர், சுனாமி வருவதற்கு முன் இப்படித்தான் வெடிச் சத்தம் கடலுக்குள் கேட்டதாக அருகில் நின்றிருந்த ஒருவர் கூறினார், மனதுக்குள் பீதி குடி கொண்டது, இந்த சன வெள்ளத்துக்குள்ளிருந்து எப்படி ஓடித் தப்புவது, தங்கச்சி விசாலியை எங்கே தேடுவது கந்தவனத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெற்குத் திக்கில் நின்றிருந்த சிலர் ஓடிக் கொண்டிருந்தனர். துவக்கு வெடிச் சத்தமல்லே இப்ப கேட்டது? அருகில் நின்று கொண்டிருந்த வடிவேல் வினாவினார், அடியார்கள் வேகம் வேகமாக வெட்டியைக் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் செல்கின்றனர், ஓடிச் செல்வர்களுக்கு மத்தியில் கையில் துவக்குடன் சினிமாப் படங்களின் வரும் கதாநாயகர்கள் போல் இரண்டு இளைஞர்கள் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.
தெற்குப் பக்கத்து தெரு மூலையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மௌனித்துக் கிடந்தான், குப்புற விழுந்து கிடந்ததால் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை, யார் பெற்ற பிள்ளையோ! அந்த இளைஞனின் உயிர் பிரியவில்லை, ஆனால் அவனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல எவரும் முயலவில்லையே, மறு முனையில் இப்போது துப்பாக்கி வேட்டுச் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றது, அங்கும் யாரோ...!
விசாலி கொண்டு கொடுத்த தேநீர் ஆறிப்போய் அருகில் இருந்தது, அதன் விளிம்பில் இலையான் ஒன்று குந்த எத்தனித்துக் கொண்டிருந்தது, கந்தவனத்தின் சிந்தனையெல்லாம் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்த ஜீவனைப் பற்றியே இருந்தது, இந்த இலையானைப் போல இயமனும் அந்த இளைஞனில் அமர்ந்து அவனது உயிரைப் உறிஞ்சிக் குடிக்க வட்டமிட்டுக்கொண்டிருப்பானோ?
அண்ண தேத்தண்ணியைக் குடியுங்கோவன், ஆறுதல்லே...... விசாலாட்சியின் சத்தத்தில் சொந்த நினைவுக்கு வந்த கந்தவனம், என்ன விசாலி கோயிலடியில நடந்தது, யார் அந்தப் பெடியன், இப்படிச் சுட்டுப் போட்டாங்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?
கடவுளே, விடுதலை பெற்றுத் தரப்போறோமெண்டு புறப்பட்ட பெடியளுக்குள்ளே இப்போ குத்து வெட்டு, ஆர் பெரியவனெண்ட போட்டி, போராளிகளெண்டு எவ்வளவு மதிப்பு மரியாதை வைச்சிருந்தம், எல்லாம் மண்ணோட மண்ணாகிப் போட்டுதே, போராட வந்த போராளிகளுக்குள்ளே பிரச்சனையெண்டால் இதைச் சீர் செய்யிறது ஆரு, அரசாங்கப் படைகள் ஒரு பக்கம் துன்புறுத்தினம், பழையபடி ரோட்டிலெல்லாம் ஆமி செக் பொயிண்ட் வந்திட்டுது, சுதந்திரமாகப் போய்வர முடியல்ல, யுத்த நிறுத்தம் வந்து அஞ்சாறு வருசம் நிம்மதியாக இருந்தம், இப்ப திருகோணமலையைப் பாருங்க, மூதூர் பகுதியில் வாழ்ந்த எங்கட தமிழாக்களும் சோனக ஆக்களும் அகதிகளாகி தெருக்களில் நடைப் பிணமாக உள்ளதை கடவுளும் கண் திறந்து பார்த்ததாகத் தெரியல்லையே, அந்தப் பகுதியில் எல்லா இடத்திலும் பிணமாக இருக்குதாம், ஒரே பிண வாடையாம், பலருடைய உடலங்கள் சிதைஞ்சு போயுள்ளதாம். சனங்கள் உடுத்த உடையோட மட்டக்களப்புப் பக்கம் ஓடிப் போயினமாம், நேற்றிரவு வெளிநாட்டு வானொலிச் செய்தியக் கேட்டதுமே கவலையாகப் போட்டுது, தாயை இழந்த அந்தக் குழந்தை தாய் இறந்ததை அறியாமல் ஏதோ வைத்தியசாலையில் அம்மா காயத்துடன் இருப்பதாக கூறியதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது, எப்போது எம்மினத்துக்கு நிம்மதி பிறக்கப் போகுதோ தெரியல்ல, அகதி வாழ்க்கை எதிரிக்கும் ஏற்படக் கூடாது, அதை அனுபவித்தவருக்குத்தான் அதன் கஷ்டம் புரியும், உங்களுக்குத் தெரியுமே அண்ண, ஆமி எல்லா இடமும் செல் அடிக்குதாம், கிபீர் விமானமும் மட்டக்களப்பு, திருகோணமலைப் பக்கத்திலெல்லாம் குண்டு வீசுதாம், யாழ்ப்பாணத்துக்கும் முகமாலையில் இருந்து அரச படையின் முன்னெடுப்பு நடக்குதாம், மட்டக்களப்பு பக்கத்திலும் அப்படித்தானாம்...... எங்களுக்கு யுத்தம் வேண்டாம் நிம்மதிதான் வேணும், எல்லோரும் நிம்மதியாக இருக்க வேணும், கண்களை மூடிக்கொண்டார் கந்தவனம்.
(மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது)
www.vaanavarkoon.tk
கருத்துக்கள்