சனி, 26 டிசம்பர், 2009

அகாலவேளை - சிறுகதை

தலைக் கேசத்தை ஒரு கையால் கோதியவாறு, கழுத்திலே தொங்கவிடப்பட்டிருந்த கைக் கட்டின் வேதனையை மறந்து அழுத முகத்துடன் தாயின் வரவுக்காக ஏங்கிக் காத்திருந்தாள் வசந்தியின் மகள்.

வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் வசந்தி, கம்பீரமான அழகான கணவனையும் ஆசைக்கு ஒரு மகனையும் ஒரு மகளையும் கொண்ட இனிமையான குடும்பம், சொற்ப காலத்திற்குள் அழகான நவீன வீட்டை நிர்மாணித்து வசந்தியின் மீதுள்ள காதலினால் அவ் வீட்டுக்கு "வசந்த மாளிகை" என நாமமும் சூட்டினான் வசந்தியின் கணவன் வரதன்.

பாடசாலையில் ஒன்றாகப் படித்த காலத்தில் இருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாகி களியாணத்தில் முடிந்தது, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டு சிறந்த பாதிரியார்களின் அசீர்வாதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது தான் வரதன் வசந்தி திருமணம்.

திருமணத்துக்கு வருபவர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக இன்னிசைக் கச்சேரியும் உண்ணுவதற்கு சுவையான சிறந்த சிற்றுண்டி மற்றும் உணவுகளெல்லாம் நினைக்கும் போது இப்போதும் நாவூறுகிறது.


"ம்ம்…… எழும்புங்கோ சேர்ச்சுக்குப் போக வேணும்" கணவனைத் தட்டி எழுப்பி அவனது கன்னத்தை மெதுவாக வருடி விட்டு குளியல் அறைக்குள் சென்றாள் வசந்தி. குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறதே, நான் தான் எழும்ப பிந்தி விட்டேனோ, அவசரமாக குளித்து விட்டு குசினிக்குள் சென்று தேநீருடன் வெளியே வந்த போது குழந்தைகளும் கணவரும் புத்தாடை அணிந்து அழகாக இருந்தனர், உண்மையில் அந்த பிரமனுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

நேற்றைய இரவு நத்தார் தினப் பூசைக்குப் போட்ட உடுப்பை அணிந்து வசந்தியும் குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது.

பூசை ஆரம்பித்து பங்குத் தந்தையினால் அப்பம் பங்கிடப்பட்ட அவ்வேளையில் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை நினைத்து கைகளை அகல விரித்து கண்களை மூடி மக்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபடலாயினர், மயான அமைதி நிலவியது அத் தேவாலயத்தில்.

அவ் அமைதி நேரத்தில் பாரிய இரைச்சல் வெளியே கேட்டது, அனைவரும் திரும்பி வீதியைப் பார்க்க, ஊரவர்கள் எல்லோரும் அழுத வண்ணம் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
"கடல் ஊருக்குள்ள வந்திற்று ஓடுங்கோ, ஓடுங்கோ" என அழுதவாறு மக்கள் உடுத்த உடையுடன் ஓடிக்கொண்டிருந்தனர், எதையும் சிந்திக்க நேரம் இருக்கவில்லை.

"வசந்தி கெதியா வா என கணவன் அழைத்ததும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகளை மறு கரத்தில் பிடித்தவாறு குறு நடையாய் வரதனின் பின்னால் வெளியே செனறாள், தெருவில் கால் வைக்கவே இடமில்லை சன நெரிசல் அளவுக்கு அதிகமாக இருந்தது, சைக்கிளில் ஏறி மிதிக்க தயாராக காத்திருந்தார் வரதன்.

நானும் மகனும் பின்னால் இருக்கும் கரியரிலும், மகள் முன்னாலும் இருக்க சைக்கிள் மெதுவாக நகர்ந்தது, வசந்தியின் வாயில் இருந்து யேசுவே, யேசுவே……. எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது, அந் நேரம் பிள்ளையாரே என்றும் முருகா என்றும் ஓடிவரும் ஒவ்வொருவரும் தலையிலடித்து அழுது கொண்டு ஓடுவது இரைச்சலுடன் இரைச்சலாய்க் கேட்டது, பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை, கடல் மலை போல் எங்களைத் துரத்திக் கொண்டே வந்தது, "அப்பா சைக்கிளை கெதியா மிதியுங்கோ, கடல் பின்னால் வந்துட்டுது, கடவுளே" எனச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் ... .... ... கடல் எங்களை மூடி விட்டது, கையில் இருந்த எனது குழந்தையை ஒரு கையாலும் மறு கையால் கணவனையும் இறுகப் பிடித்துக் கொண்டேன், எங்களுக்குப் பின்னாய் ஓடி வந்தவர்களின் ஒரு பகுதி கடலலையிலே அடிபட்டுச் செல்வதை உணரத்தக்கதாக இருந்தது.

குழந்தையையும் கணவனையும் இறுகப் பிடித்திருந்த கை நழுவி விட்டதன் பின் நடந்தது எதுவுமே வசந்திக்குத் தெரியாது. கடலலை வசந்தியை தூரத்தே கொண்டு போட்டுச் சென்றது.

தலையிலும் காலிலும் பலத்த வெட்டுக்காயம், அதைப்பற்றி சிந்திக்காமல், அருகே உயிர் தப்பிக் காணப்பட்டவர்களிடையே கணவனையும் குழந்தைகளையும் தேடலானாள், அவர்களைக் காணாததால் கண்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள். எல்லோரும் பதில் சொல்லக் கூடிய நிலையில் இல்லை, மீண்டும் சுனாமி வந்து விடுமோ எனும் அச்சத்தில் அவசர அவசரமாக கையில் கிடைத்தவற்றுடன் ஓடிக் கொண்டிருந்தனர்.

வைத்தியசாலையில் காயப்பட்ட சிலரையும் இறந்தவர்கள் பலரையும் வைத்திருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்த்த போது மகள் காயத்துடன் அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தாள், மனம் சற்று ஆறுதலடைய அன்புக் கணவனையும் ஆசை மகனையும் தேடினாள் வசந்தி, காயப்பட்டவர்களின் பகுதியில் காணப்படாததால் மனதைத் தேற்றிக் கொண்டு மரணித்தவர்களின் பகுதிக்கு ஜடமாகச் சென்றாள், அவளது உள் மனமோ கடவுளே எனக்கு பிரிவு வரக்கூடாது, எனது கணவனும் மகனும் உயிரோடு இருக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தது.

மனித உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒழுங்கற்றுப் போடப்பட்டிருந்தது, இந்த உடலங்களுக்கு மத்தியில் வரதனையும் குழந்தையையும் எப்படித் தேடுவாள் வசந்தி, அவளும் மெல்லிய மனம் கொண்ட பெண் தானே, மனதைக் கல்லாக்கிக் கொண்டு கிடத்தப் பட்டிருந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டி தனது உறவுகளைத் தேடினாள். முகம் சிதைந்த நிலையில் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கொண்டு வரதனை அடையாளம் கண்டு ஓவென்று கத்தினாள், மகனின் உடலத்தைக் காணவே இல்லை.

கண்ணீர் அவளையும் மீறி ஓடிக் கொண்டிருந்தது, பைத்தியம் பிடித்தவள் போலானாள், வசந்திக்கு அனுதாபம் தெரிவிக்க யாருமே இல்லை, ஏனையோர்களும் வசந்தியைப் போல் தங்களுக்குத் தேவையானவர்களை அழுதழுது தேடிக் கொண்டிருந்தனர், வசந்தி மனதைத் திடப் படுத்திக் கொண்டாள், தனது இரு கைகளாலும் கண்களைத் துடைத்து விட்டு கணவனின் உயிரற்ற சடலத்தை வாரித் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

மரண வீட்டுக் கிரியை செய்ய நேரமின்றி தனி ஒருத்தியினால் துணிச்சலாக வரதனின் பூவுடல் அவசர அவசரமாக தெரியாத ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது, இந்தச் சூழலில் மற்றவர்களும் தங்களது இறந்த உறவுகளை கூட்டமாகவும், தனியாகவும் விதைத்துக் கொண்டிருந்தார்கள், நேரமின்மையால் பிரேதங்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு புதைகுழியில் ஒன்றாக கொட்டப்பட்டு மணலால் மூடப்பட்ட சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தது.

கணவனின் இழப்பின் பின் வாழ வழி தெரியாமல் திக்குமுக்காடி நிற்கும் வசந்திக்கு துன்ப துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, அழகியான வசந்திக்கு உறவு என்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரமே தான், வசதியாக வாழ்ந்த அன்பான குடும்பம் சுனாமியால் தாக்குண்டு சீரழிந்து நிற்கின்றது, குடிசை வாழ்க்கை, பொது மலசல கூடம், பொதுக் கிணறு போன்றவற்றுக்குப் பழக்கப் படுத்திக் கொண்டாள் வசந்தி.

அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரணப் பொருட்களை வாங்கவெனச் செல்லும் போதும் வசந்தியை ஆண் வெறியர்கள் சிலர் சீண்டிப் பார்க்கவும் தவறவில்லை, வக்கிரம் கொண்டவர்களின் காமப் பார்வையில் இருந்து தப்புவதற்காக வசந்தி படும்பாடு சொல்லியடங்காது.

இளம் பெண்ணான வசந்தி விதவையாக இருப்பது பெண் பித்தர்களுக்கு சக்தியூட்டுவதாகவே அமைகின்றது, சிநேகிதம் பிடிக்கவென எத்தனையோ பேர் பின்னால் அலைவது வசந்திக்குத் தெரியாததல்ல.

அவளின் சிந்தனை எல்லாம் காணாமல் போன தனது ஆண் குழந்தையையும், அன்புக் கணவனைப் பற்றியதுமே, வேற்றுச் சிந்தனைக்கு அவளின் மனம் தாவவில்லை, சந்தோசமாக குறைகள் ஏதுமின்றி தன்னையையும் குழந்தைகளையும் வைத்து பாதுகாத்த கணவன் வரதனை நினைக்காத நாளே இல்லை எனலாம், கடல் துரத்தி வந்த அந்த அகால வேளையிலும் எங்கள் உயிரைப் பாதுகாக்க வரதன் பட்ட அவஸ்த்தையை நினைத்து நினைத்து அவளது மனம் படும் கோரத்தை விபரிக்க முடியாது.

"நேரம் பதினொரு மணியாகிற்று வாங்க அம்மா நித்திரை கொள்ளுவம்", மகள் அருகில் வந்து தாயின் கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்து அழைத்துச் செல்வாள் நித்திரைக்கு, இது சுனாமி அவளுக்கு கொடுத்துச் சென்ற பரிசில், தினமும் நிகழும் நிகழ்வு இது, அவளது கண்கள் என்ன கடலா,.

மகள் மூன்றாம் தரத்தில் பாடம் படிக்கிறாள், அகதிமுகாமில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தான் அவளது பாடசாலை, வகுப்பில் முதலாம் பிள்ளையும் அவளே. வசந்திக்கு சொந்தமென்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரம் தான், அவளை நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாகப் பார்க்க வேண்டுமென்பது வசந்தியின் தற்போதைய இலட்சியம்.

காலையில் மகளை குளிக்க வைத்து சுத்தமான ஆடை அணிவித்து அயலில் உள்ள ஏனைய பிள்ளைகளுடன் மகளையும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள் வசந்தி.

வசந்தி அண்டி.... பக்கத்து குடிசையில் வசிக்கும் அன்னம்மாவின் மகள் கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து வினாவியதைத் தொடர்ந்து மயக்கமுற்றாள் வசந்தி, இடி மேல் இடி அவளது தலையிலே விழுவதாக நினைத்தாள், பாடசாலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பும் போது தெருவால் வந்த மோட்டார்சைக்கிளில் மோதுண்டு காயப்பட்டு பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட செய்தி மேலும் அவளைப் பாதித்தது!

பஸ் போக்குவரத்து சீரில்லாத இக் கிராமத்தில் இருந்து நினைத்தவுடனே நகரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு போய் வருவதென்பது இலேசுப்பட்ட காரியமா, அழுதாள் விடியும் வரையும் அழுதாள். சேவல் கூவுகின்றது, மாட்டு வண்டியொன்று கடவென்று போகும் சத்தமும் கேட்கிறது, அகதிக் குடிசைகளுக்கு பொழுது விடிந்ததை தினமும் பறைசாற்றும் கடிகாரங்கள் இவை. அழுதழுது கண்கள் விறைத்துப் போய் நித்திரை இல்லாமல் இருந்த வசந்தி, எழும்பி அடுப்படிக்குச் சென்று கரித்துண்டொன்றை வாயிலிட்டு பல்லை மினுக்கி, முகம் கழுவி வெளியே வந்து அடிவானத்திலுள்ள விடிவெள்ளியைப் பார்த்து மீண்டும் ஒருமுறை நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அருமை மகளைப் பார்க்க போய்க் கொண்டிருக்கிறாள் தெருவை நோக்கி....

(கடற்கோள் பேரனர்த்ததில் மரணித்த எனது ஆத்ம நண்பன் அ.ஞானேந்திரன் குடும்பத்தினருக்கு இச் சிறுகதை சமர்ப்பணம்)



www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

புதன், 16 செப்டம்பர், 2009

ஆசை... ஆசை... !

அழகு தமிழில் பா வடித்து
ஆணித்தரமாய் பறைசாற்ற விசைந்து
இயலிசை நாடகத்தை ஒத்து
ஈர்ப்புக்கு வழிகோருவதே ஆசை!

# # # # #

உருவமைப்பை உவமானமாக்கி
ஊழிக் காலத்தின் எண்ணமறிந்து
எழுத்துக்கு சார்பெடுத்து இலக்கிய பூமியில்
ஏர் கொண்டுழுவதே ஆசை!

# # # # #

ஐந்திலே அகில மறிந்து
ஒற்றுமையாய் ஒன்றித்து
ஓராயிரம் கவி படைக்க
ஔவை முதுமொழி முகர்வதே ஆசை!


www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2009

கவிஞர்கள்! - கவிதை


கடதாசியில்
கண்டதையும் கீறும்
எழுத்துலக
இலக்கியப் பிரசவிப்பாளர்கள்!

^ ^ ^

கருப்பொருளைக்
களங்கமின்றி
கடுகாகத்
தருபவர்கள்!

^ ^ ^

காலத்தின்
கோலத்துக்கேற்ப
வியாபிக்கும்
கருத்தை
விருப்புடன்
விதைப்பவர்கள்!

^ ^ ^

விளையும் கவியை
வியாபார நோக்கின்றி
வையகத்துக்கு இயம்பும்
வளமான விற்பனர்கள்!

^ ^ ^
www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

புதன், 9 செப்டம்பர், 2009

எச்சம் - கவிதை


சிவப்பாய்
மனித
மணமுள்ள
மண்!

* * *

சுற்றம்
சூழல்
சகதியாய்ச்
சுடுகாடு!

* * *

வெடிச்
சத்தம்
அருகில்
சப்பாத்துக்
காலரவம்!

* * *

மாலையில்
வல்லூறு
வௌவால்
ஊழையிடும்
நாயொலி!

* * *

குற்றுயிராய்க்
குதறிய
கேட்பாரற்ற
மனிதம்!

* * *

இவை...

* * *

துப்பாக்கி
உமிழ்ந்த
உவகையின்
எச்சங்கள்!

(17 - 23, செப்டம்பர் 1995 தினமுரசு பத்திரிகையின் தேன்கிண்ணம் பகுதியில் பிரசுரமாகியது)

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பிரசவம்! - கவிதை


எழுதுகோலின்
மகவுக்கு
மங்கல
வெளியீடு...!

* * *

புத்தக
இடுக்கிலிருந்து
நலிந்துபோன
படைப்புக்கு
வெள்ளோட்டம்...!

* * *

இருண்ட
வாழ்வின்
அஞ்ஞாதவாச
அரங்கேற்றம்...!

* * *

இடையை
அளக்க
அவையினருக்கு
அரிய சந்தர்ப்பம்...!

* * *

விதவைக்
கடதாசிக்கு
குங்குமப் பொட்டிட்ட
சுமங்கலி
வாழ்க்கை...!

* * *

கலைப் பிரியர்களுக்கு
ஒரு தாயின்
கண்ணீர்க்
காணிக்கை...!

(ஜூலை.02,ஜூலை.08, 1995 தினமுரசு பத்திரிகையில் "தேன்கிண்ணம்" பகுதியில் பிரசுரமாகியது)

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

திங்கள், 7 செப்டம்பர், 2009

அம்மா! - கவிதை


ஜனித்ததும்...
எதிர்கால கஷ்டத்தை
பெற்றோருக்கு
உணர்த்தும்
மகவின்
ஒத்திகை ஓசை!

(1995 ஆகஸ்ட் 20 சூடாமணி பத்திரிகையில் பிரசுரமானது)

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

மரண தண்டனை ! - கவிதை

ஜனநாயகம் காக்கும் நாட்டில்
மனிதத்தை நேசித்த
மானுடனுக்கா
நடுத்தெருவில் வைத்து
துப்பாக்கி வேட்டெனும்
மரண தண்டனை!

உண்மையை
உரத்துக் கூற
படிமம்
வகுத்துத் தந்த
சிற்பிக்கா
மரண தண்டனை!

அரைஞாண் கயிற்றால்
நடுவன் ஊடகத்துறைக்கு
கடிவாளமிட்டதால்
கிடைத்த கிரீடமோ
அனாதைப் பிணமெனும்
மரண தண்டனை!

ஊடகவியலாளனுக்கும் அப்பால்
மரித்தவன் மானிடன் என்பதால்
கொலைஞனைக் கண்டிக்க
முள்ளந்தண்டை நிமித்தாத
பத்திரிகையாளர்களே
ஏன் மௌனித்தீர்கள்
உங்களது பேனாக்களுக்குமா
மரண தண்டனை!

புது இராச்சியம் படைத்த
அற்புதனே
உன் பரிணாமத்திலுமா
ஓட்டைகள்
எழுதுகோலுக்கு
செங்குருதி மையிட்டு
சமூகத்துக்கு உருக்கொடுத்த
எழுத்தாளனே
இரத்தம் சிந்துமளவுக்கு
ஏன் உனக்கு
மரண தண்டனை!

கிழித்ததும்
சீறிக் கொள்ளும்
தீக்குச்சாய்
செய்தி சேகரிக்கும்
ஊடகங்களே
உங்களது
குரல்வளை ஓசையையும்
பெட்டிப் பாம்பாக்கியதோ
மரண தண்டனை!

அற்புதனே
மீள் பிறப்பு
நிச்சயமிருப்பின்
எழுத்தாளனாக
மீண்டும் வா
கொலைஞர்களைக்
கழுமரத்தில் ஏற்றி
வழங்கிடுவோம்
மரண தண்டனை!

(2000 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டது)
www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

சனி, 5 செப்டம்பர், 2009

மீண்டும் எனக்கு! - கவிதை



சற்று நேரம்

உலகத்தை மறந்து

நினைவிழந்து

ஜடமாக

உலாவிய அந்த நாழிகை

மீண்டும் எனக்கு...


* * *

ஜனனம் முதல்

சீராட்டி வளர்த்த

மாமனிதன்

மரணித்த

அச் சேதி காதில்

எதிரொலிக்க

கண்ணீர் வழிவிட்ட

தடத்தில்

வெண்ணிறப்

படிமம்

பிசுபிசுக்க

நாவறண்டு

வாயில் உப்புக் கரிக்க

மீண்டும் எனக்கு...


* * *

வயல் வட்டையில்

ஏர் கொண்டுழுது

சுரி பிசிறி எறிய

மண்வெட்டி கொண்டு

வரம்பு கட்டி

நெல் விதைச்சி

குனிந்த குனி நிமிராமல்

கதிராடாம

வெள்ளாம வெட்டி

கட்டுக் குமிச்சி

வேலக்காரன்

கம்பெடுத்து

சூடடித்துச் சுண பாக்காம

பொலி தூத்தி

பதக்கட

பறக்கவிட்டு

முதலாம் பொலி

கொண்டு வந்து

வீட்டுப் பட்டறையில்

பதமாக வைக்க

பழக்கிய உங்களது நினைவே

மீண்டும் எனக்கு...


* * *

தையில் புதிரெடுத்துச்

சோறாக்கி

முதியான்கண்டெருமைத்

தயிர்

முதலாய்

கறி சமைத்து

சொந்தமுடன் கூடியிருந்து

உண்டு மகிழ்வோமே

அச் சம்பிரதாயச் சடங்கு

மீண்டும் எனக்கு...


* * *

தானாக நாலு பணம்

சம்பாதிச்சு வாழ

வேண்டுமென்பதற்காக

கருங்கல்

உடைப்பது முதல்

வீட்டுத் தோட்டம்

செய்யக்

கற்றுத் தந்து

தொழிலற்ற

இளந்தாரியென

ஊரார் பழிக்கக் கூடாதென

வேலை பழக்கிய

அந்த ரேகை

அழிந்து போன கையே

மீண்டும் எனக்கு...


* * *

மாற்றானி்ன்

தயவில் தொங்கி

வாழாமல்

முன்னேற வழி

கற்றுத் தந்த

அந்தக் கம்பீரக்

குரலோசை

என் காதில்

மீண்டும் எனக்கு...


* * *

நேற்றிரவு கனவில்

வேரோடு சாய்ந்த

மாமரமும்

இலுப்பை மரத்தில்

விட்டு விட்டு முக்கிய

பக்கிளும்

காலையில்

கிணற்றுக் கட்டில்

குந்தியிருந்து கதறிய

அண்டங்காகமும்

சகுனமெனத்

தெரிந்திருந்தால்

மீண்டும் எனக்கு...


* * *

கண்ணீர்

வடிப்பதைத் தவிர

வேறெதுவும்

பிரதியுபகாரமாகச்

செய்ய முடியாத

பாவி நான்

மௌனித்த

உங்கள் ஆத்மாவை

என்றோ ஒரு நாள்

என் ஜீவன்

சந்திக்குமென்றொரு

விதியிருந்தால்

மகனாகப் பிறக்க

ஆண்டவனிடம்

கெஞ்சுகின்றேன்

மீண்டும் எனக்கு...


* * *

(1996.12.08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான தினகரன் வாரமஞ்சரியின் "கவிதா சாகரம்" பகுதியில் பிரசுரமான கவிதை)




www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

வன்னி மக்கள் - கவிதை



வாயைக் கட்டி
வயிற்றைக் கட்டி
தேனீ தேன் சேர்க்குமாப் போல்
சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில்
செதுக்கிய வீட்டுடன்
சொத்திழந்து
உயிரைத் தப்புவிக்க
உண்ண உணவோ
உடுக்க உடையோ யின்றி
நடைப் பிணமாய்
பரதேசியால் அலைந்து
வந்து விழும் வெடிகுண்டில்
சதைப்பிண்டங்கள் சிதிலமடைய
உறவுடன்
கூடவிருந்தவர்களை இழந்து
இலக்கங்களே நாமமென
முகவரியிழந்த மனிதர்களாய்
வானத்தைக் கூரையாக்கி
வாழ நிர்ப்பந்திக்கபட்ட
ஊனமுற்ற உயிரினம்!

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

மானுட உயிர் - சிறுகதை

கோவிலில் காண்டாமணியோசை கேட்கின்றது, இன்றைக்கு கோவில் தீர்த்தமல்லே, நேரத்துக்குப் போனால்த் தான் சுவாமி பூசையையும் பார்த்திட்டு தீர்த்தமாடப் போகலாம், சுனாமிக்குப் பிறகு கடற்கரைக்குப் போகவே பயமாக இருக்கு, சுனாமி அடிச்சதில கடற்கரையில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு எதுவித வீடு மனையும் மிஞ்சல்ல, ஆனா இந்த கோவில் மட்டும் மிஞ்சி இருப்பது அந்த முருகனில் செயல் தான், ஒரு கல் கூட அசையல்லையே! தமையன் கந்தவனத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் விசாலாட்சி, முருகா... முருகா... எல்லோரையும் பிரச்சனை ஒண்டும் இல்லாமல் காப்பாத்தப்பா...

சுனாமியின் தாக்கத்தில் கணவனை இழந்தவள் தான் விசாலாட்சி, வெளிநாட்டிலுள்ள மூன்று பிள்ளைகளும் தாங்கள் வசிக்கும் நாடுகளுக்கு வருமாறு அழைத்தும், கணவன் மரித்த இந்த மண்ணை விட்டு எங்கும் சென்று வாழ்வதற்கு விருப்பமற்றவளாய் கிராமத்திலே வாழ துணிந்து விட்டாள் விசாலாட்சி, இங்கே சகோதரனும் தனித்து வாழ்வதனால் தான் பிள்ளைகளிடம் போய் விட்டால் அண்ணையும் தனித்துப் போவாரே எனும் கவலையினால் இங்கே வாழ முடிவு செய்து விட்டாள்.

என்ன அண்ண நேரமாகுதல்லே, எழும்பி வெளிக்கிடுங்கோ, கோயிலுக்குப் போட்டு வருவம், சுவாமி தீர்த்தமாடி வந்ததும் கோயிலில் அன்னதானம் கொடுப்பினம், அங்கேயே சாப்பிட்டு வருவம் என்ன, ஓம் பிள்ளை எனக்கும் அன்னதானத்தில் சாப்பிட நல்ல விருப்பம், வருசத்துக்கு ஒரு தரம் அந்த முருகன் சன்னிதானத்தில் இருந்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவதில் ஒரு சந்தோசம் தான், என்ன விசாலி, அப்ப போட்டு வருவம் வாரும்.

அரோகரா அரோகரா... சத்தம் வானைப் பிளக்க எங்கும் பக்தர்கள் கூட்டம், ஆண்கள் வெள்ளை வேட்டி அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் தமிழரின் கலாசாரப் பண்பாட்டைக் காப்பாற்றும் ஒரே இடம் கோவில் எனச் சொல்லும் அளவுக்கு அழகாகக் காணப்பட்டது கோவில் வளாகம், கால் வைக்க இடமில்லை, ஒரே சனக் கூட்டம், முருகனின் திருவிளையாடல் தான் என்னவோ இன்று வானமும் மப்பும் மந்தாரமாக இருக்கிறது, இதனால் வெய்யிலின் அகோரம் குறைந்து சாதகமான காலநிலையாக இருக்கிறது. அங்கப் பிரதட்சணை செய்வோர், அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் செய்வோர், காவடியாடுவோரென கோவிலில் இட நெருக்கடியாக இருக்கிறது, கற்பூரம் கொழுந்து விட்டு எரிகின்றது. அரோகரா அரோகரா... பூசகரின் தீப ஆராதனையைக் கண்டதும் பக்தர்கள் கரங்களை தலைக்கு மேல் தூக்கி முருகனை வணங்குகின்றனர்.

கோவிலின் வெளி வளாகத்தில் வரிசையாகக் கடைகள், அந்தக் கடைகளில் சனக் கூட்டம் அதிகமாக உள்ளனர், இளைஞர்கள் ஐஸ்கிறீம் வண்டிகளுக்கு அருகில் நின்று குளிர்களி உண்டு மகிழ்கின்றார்கள், அன்னதானத்துக்குரிய சமையல் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறன, அதனால் அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காணப்படுகின்றது. கண்களைக் கசக்கிக் கொண்ட கந்தவனம், கடற்கரையை நோக்கி தீர்த்தமாடச் செல்லும் சுவாமியின் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார், அர்ச்சகரின் சமஸ்கிருத அர்ச்சனை, ஓதுவார்களின் தெய்வீகப் பாடல்கள், ஊதுபத்தியின் நறுமணம் போன்றவையால் அவ்விடம் இறை சிந்தனை கொண்ட களமாக விழங்கியது.

கடல் அமைதியாக சுவாமியின் வருகைக்காகக் காத்திருப்பது போன்று தெரிகின்றது, அடியார்கள் சுவாமியின் தீர்த்தமாடலைத் தொடர்ந்து கடலில் இறங்கித் தீர்த்தமாடுகின்றனர், எங்கும் அரோகரா அரோகரா எனும் சத்தமே கேட்கின்றது.

அந்த பக்தி பூர்வமான நேரத்தில் ஓர் வெடிச் சத்தம் கேட்டது, நிசப்தம் குடி கொண்டது, சிலர் வேகமாகப் பின் வாங்கினர், சுனாமி வருவதற்கு முன் இப்படித்தான் வெடிச் சத்தம் கடலுக்குள் கேட்டதாக அருகில் நின்றிருந்த ஒருவர் கூறினார், மனதுக்குள் பீதி குடி கொண்டது, இந்த சன வெள்ளத்துக்குள்ளிருந்து எப்படி ஓடித் தப்புவது, தங்கச்சி விசாலியை எங்கே தேடுவது கந்தவனத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெற்குத் திக்கில் நின்றிருந்த சிலர் ஓடிக் கொண்டிருந்தனர். துவக்கு வெடிச் சத்தமல்லே இப்ப கேட்டது? அருகில் நின்று கொண்டிருந்த வடிவேல் வினாவினார், அடியார்கள் வேகம் வேகமாக வெட்டியைக் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகச் செல்கின்றனர், ஓடிச் செல்வர்களுக்கு மத்தியில் கையில் துவக்குடன் சினிமாப் படங்களின் வரும் கதாநாயகர்கள் போல் இரண்டு இளைஞர்கள் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

தெற்குப் பக்கத்து தெரு மூலையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் மௌனித்துக் கிடந்தான், குப்புற விழுந்து கிடந்ததால் அவனது முகம் சரியாகத் தெரியவில்லை, யார் பெற்ற பிள்ளையோ! அந்த இளைஞனின் உயிர் பிரியவில்லை, ஆனால் அவனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல எவரும் முயலவில்லையே, மறு முனையில் இப்போது துப்பாக்கி வேட்டுச் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றது, அங்கும் யாரோ...!

விசாலி கொண்டு கொடுத்த தேநீர் ஆறிப்போய் அருகில் இருந்தது, அதன் விளிம்பில் இலையான் ஒன்று குந்த எத்தனித்துக் கொண்டிருந்தது, கந்தவனத்தின் சிந்தனையெல்லாம் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த அந்த ஜீவனைப் பற்றியே இருந்தது, இந்த இலையானைப் போல இயமனும் அந்த இளைஞனில் அமர்ந்து அவனது உயிரைப் உறிஞ்சிக் குடிக்க வட்டமிட்டுக்கொண்டிருப்பானோ?
அண்ண தேத்தண்ணியைக் குடியுங்கோவன், ஆறுதல்லே...... விசாலாட்சியின் சத்தத்தில் சொந்த நினைவுக்கு வந்த கந்தவனம், என்ன விசாலி கோயிலடியில நடந்தது, யார் அந்தப் பெடியன், இப்படிச் சுட்டுப் போட்டாங்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?

கடவுளே, விடுதலை பெற்றுத் தரப்போறோமெண்டு புறப்பட்ட பெடியளுக்குள்ளே இப்போ குத்து வெட்டு, ஆர் பெரியவனெண்ட போட்டி, போராளிகளெண்டு எவ்வளவு மதிப்பு மரியாதை வைச்சிருந்தம், எல்லாம் மண்ணோட மண்ணாகிப் போட்டுதே, போராட வந்த போராளிகளுக்குள்ளே பிரச்சனையெண்டால் இதைச் சீர் செய்யிறது ஆரு, அரசாங்கப் படைகள் ஒரு பக்கம் துன்புறுத்தினம், பழையபடி ரோட்டிலெல்லாம் ஆமி செக் பொயிண்ட் வந்திட்டுது, சுதந்திரமாகப் போய்வர முடியல்ல, யுத்த நிறுத்தம் வந்து அஞ்சாறு வருசம் நிம்மதியாக இருந்தம், இப்ப திருகோணமலையைப் பாருங்க, மூதூர் பகுதியில் வாழ்ந்த எங்கட தமிழாக்களும் சோனக ஆக்களும் அகதிகளாகி தெருக்களில் நடைப் பிணமாக உள்ளதை கடவுளும் கண் திறந்து பார்த்ததாகத் தெரியல்லையே, அந்தப் பகுதியில் எல்லா இடத்திலும் பிணமாக இருக்குதாம், ஒரே பிண வாடையாம், பலருடைய உடலங்கள் சிதைஞ்சு போயுள்ளதாம். சனங்கள் உடுத்த உடையோட மட்டக்களப்புப் பக்கம் ஓடிப் போயினமாம், நேற்றிரவு வெளிநாட்டு வானொலிச் செய்தியக் கேட்டதுமே கவலையாகப் போட்டுது, தாயை இழந்த அந்தக் குழந்தை தாய் இறந்ததை அறியாமல் ஏதோ வைத்தியசாலையில் அம்மா காயத்துடன் இருப்பதாக கூறியதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது, எப்போது எம்மினத்துக்கு நிம்மதி பிறக்கப் போகுதோ தெரியல்ல, அகதி வாழ்க்கை எதிரிக்கும் ஏற்படக் கூடாது, அதை அனுபவித்தவருக்குத்தான் அதன் கஷ்டம் புரியும், உங்களுக்குத் தெரியுமே அண்ண, ஆமி எல்லா இடமும் செல் அடிக்குதாம், கிபீர் விமானமும் மட்டக்களப்பு, திருகோணமலைப் பக்கத்திலெல்லாம் குண்டு வீசுதாம், யாழ்ப்பாணத்துக்கும் முகமாலையில் இருந்து அரச படையின் முன்னெடுப்பு நடக்குதாம், மட்டக்களப்பு பக்கத்திலும் அப்படித்தானாம்...... எங்களுக்கு யுத்தம் வேண்டாம் நிம்மதிதான் வேணும், எல்லோரும் நிம்மதியாக இருக்க வேணும், கண்களை மூடிக்கொண்டார் கந்தவனம்.

(மூன்று வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதை இது)

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2009

ஆக்க இலக்கியம்

ஆக்க இலக்கியப் படைப்புகள் இங்கு சங்கமிக்கும் !

www.vaanavarkoon.tk

கருத்துக்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

வானவர்கோன் பதிவகம்

இது வானவர்கோன் பதிவகம்.
ஊடகங்களில் ஏற்கனவே பதிவான வானவர்கோனின் ஆக்கங்கள் இப் பதிவகத்தில் தடம் பதிக்கும்.

வாசகர்களும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.



www.vaanavarkoon.net.tc

கருத்துக்கள்

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails