செவ்வாய், 27 டிசம்பர், 2011

நண்பன் ஞானியின் 7 வது நினைவேந்தல்.


கடற்கோளின் சீற்றத்துக்கு கடந்த 2004 டிசம்பர் 26 ம் திகதி பலியான எனது ஆத்ம நண்பன் ஞானேந்திரன் அவரது மனைவி மற்றும் அன்னாரது அருமை மகனின் 7 வது நினைவேந்தல்.

www.vaanavarkhon.net.tc


கருத்துக்கள்

செவ்வாய், 8 நவம்பர், 2011

படுவான்கரை - சிறுகதை

"படுவான்கரை பதினொரு கிராமங்களுக்கும் கேட்கும் இரட்டு மேளச் சத்தமும், மணியோசையும் கேட்டு வெகு நேரமாகப் போயிட்டு, இன்னமும் மாவிலங்கமுனைத் துறையடிக்கு மீன் பிடிக்கப் போக, கூ.....போடும் சத்தத்தைக் காணல்லையே" யோசித்தவாறு பாக்கை வெட்டி வெற்றிலைக் குட்டானுக்குள் திணித்தவாறு முற்றத்தில் குந்தி இருந்தான் குறத்திகந்தன்.

"சாச்சோ......" தூரத்தில் சத்தம் கேட்டதும் வலையைத் தூக்கி தோளில் போட்டவாறு வெளியேறி சந்தியில் நின்று கொண்டிருந்த கும்புறுகந்தனைப் பார்த்து, "என்ன மச்சான் விளாவெட்டுவான்கந்தனும், சலவைக்கந்தனும் வரல்லயா?"

கும்புறுகந்தன் மீண்டுமொரு தரம் "சாச்சோ...." எனக் கூவியதும், தூரத்தே இரண்டு சத்தங்கள் கூ...., கூ........ வெனக் கேட்டன. "ஆ... துறயடியில நிக்கிறாங்க போலத் தெரியுது, போவம்....." என்றவாறு மாவிலங்கமுனைத் துறையடிக்கு சென்றனர்.

நான்கு பேரும் ஆற்றில் இறங்கி கறிக்கு மீன் பிடித்து விட்டுத் திரும்பினர். "சாச்சா நீங்க முடிஞ்சி தந்த அத்தாங்கு பிஞ்சி போச்சி, புதுசொண்டு முடிஞ்சு தரணும்....." குறத்திகந்தனைப் பார்த்துக் கேட்டான் கும்புறுகந்தன். "வயலுக்குப் போற வேலயும் இரிக்கி, நேரமிருந்தா செஞ்சி தாறன்."

"வெள்ளாம வட்ட வேலயெல்லாம் முடிஞ்சு யோயித்து, மாடுகளைப் பாக்கிற வேல தான் இரிக்கி, முதியான் நாம்பனுகளை பாத்து விக்கணும், நாகுகளுக்குக் குறி வெய்க்கவுமில்ல, பஞ்சாங்கத்தில நல்லதா ஒரு நாளப் பாத்து மாடுகளுக்கு குறி வெச்சி வந்திரணும், பொறகு மாடுகள் மாறுப்பட்டா ஒண்டுஞ் செய்யேலது, நான் காலயடிக்குப் போகப் போறன் வாறண்டா வாங்க...." என விளாவெட்டுவான்கந்தன் குறத்திகந்தனைப் பார்த்து கேட்டான்.

"மாட்டுக்கு குறி வெய்க்க நல்ல நாளாம் இண்டைக்கு, பூரண எண்டதால நானும் காலயடிக்குப் போய் மாட்டுக்கு குறி வெய்க்கப் போறன், பால இண்டைக்கு பால்காறனிட்ட குடுத்தனுப்புறன், கொண்டு வாற பாலக் காச்சி பெரிய சட்டியில ஊத்தி உறையப் போட்டு வை நாகம்மா, நம்மட ஆசுபத்திரி டாக்குத்தர் வேறிடத்துக்கு மாறிப் போறார், நாமும் நன்றிக் கடனுக்கு ஏதாவது குடுக்கத்தானே வேணும்?, தயிர்ச் சட்டியக் குடுப்பம்."

"நேற்றய தயிரெல்லாத்தையும் முல்லக்காரன்ட பொஞ்சாதிட்ட குடுத்து காத்தாங்குடியில வித்திட்டு வரச் சொல்லல்லையா...." என்று குறத்திகந்தன் மனைவியிடம் கேட்கலானான். "..... நேற்று ஊர்காவல் படைய சுட்டதால அங்கிட்டுப் பக்கம் ஆருமே போகல்ல, அது தான் தயிரெல்லாம் அப்படியே கிடக்கு" என்றாள் நாகம்மா.

"தலயில வெச்சி காத்தாங்குடிக்கு தூக்கி போறண்டா எவ்வளவு கக்கிசம், பாவம் பொன்னம்மா நேத்து களுவாஞ்சிக்குடிக்கு போய், போகேலாம திரும்பி வந்திட்டாள், பஸ் ஓட்டமும் இல்லையாம், கடையெல்லாம் அடச்சிக் கிடக்காம், ரோட்டெல்லாம் ஆமிக்காரண்டா வாகனம் தான் போகுதாம்"

"கொத்தியாவலயில இருந்து மாவிலங்குமுனைத் துறையால அக்கரப்பட்டு மரம் கொண்டு போக நம்மட அகமது காக்காட மகன் இஸ்மாயில் வருவான். அவன் இண்டைக்கு கும்புறுகந்தன்ட ஊட்டுக்குப் போவான், அவனக் கூப்பிட்டு இரிக்கிற தயிரெல்லாத்தயும் குடுத்து விடு. அவன் வரல்லயெண்டால், ஏறாவூரில இருந்து புல்லுப் புடுங்க இந்தப் பக்கம் வாற முஸ்லிம் பொண்டுகளிட்ட குடுத்து விடு நாகம்மா, பாவம் அதுகள் கொண்டு போய்ச் சாப்பிடட்டும், நம்மட ஆக்களுக்குக் குடுத்தா வாங்கவும் மாட்டாங்க, அதுதான் அவயளிட்ட இரிக்கிதே!"

"துறையடிப் பக்கம் வெடிச் சத்தம் கேக்குது!, தண்ணிச் சோத்தையும் தயிரையும் எடு நாகம்மா சாப்பிடுவம்." தண்ணீர்ச் செம்பை எடுத்து கையையும் வாயையும் கழுவியவாறு "சாப்பிட்டுத்து என்ன வெடிச் சத்தமெண்டு பாத்திட்டு வாறன் புள்ள." சோற்றைப் பிசைந்து உண்டு கொண்டிருந்தான் குறத்திகந்தன்.

"சாச்சா இரிக்காரா?" கும்புறுகந்தனின் சத்தம் வேலியோரப் பக்கம் கேட்கவே, "படலையில் இரிக்கிற உழலைய எடுத்து ஓரமா வெச்சிற்று உள்ள வாவன்!" பதட்டமடைந்தவனாக உள்ளே வந்த கும்புறுகந்தன் "மண்முனைத் துறையடியில ஊராக்கள்ற உடுப்புகளத் தோய்த்துக் கொண்டிருந்த
சலவைக்கந்தனை சந்தேகத்தில சுட்டுட்டாங்களாம், ஆசுபத்திரிக்கு ஜீப்பில கொண்டு போறாங்க, நாமளும் போய்ப் பாத்திட்டு நேரத்துக்கு வந்திடுவம்."

(கிழக்கு மாகாணத்தின் படுவான்கரை பகுதியின் பேச்சு வழக்கினைத் தழுவி எழுதப்பட்டது.)

பிரசுரமான திகதி: தினமுரசு வாரமலர் ஏப்ரல் 12 - 18, 1998.




www.vaanavarkhon.net.tc

கருத்துக்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011

ஊரோடி - கவிதை



ஊரோடி

ஊரவர் பலரின் உயிரைக்
காவு கொண்டவன் தான்
அறங்காவற்குழுவின்
காவலன்!

ஊரின் அழிவுக்கு
வித்திட்டவன் ஊர்தியில் ஊர்வலம்
உயிரைக் கையில் பிடித்தவன்
நடைப்பிணம்!

பல்லக்குத் தேடும் பரதேசி
உதிரக் கறையை அலசி
காற்றுவாக்கில் ஆண்டியாய்
ஊர்உலா!
www.vaanavarkhon.net.tc

கருத்துக்கள்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

கருங்கூந்தலும் கடுக்கனும் - சிறுகதை




(தினமுரசு வாரமலர் டிசம்பர் 21 – 27 , 1997 பத்திரிகையில் பிரசுரமானது)

சிறந்த விவசாயிக்கான பரிசாக ஒரு இலட்சம் ரூபா பணத்தினை வழங்க வங்கியொன்று முன்வந்தது. விவசாயத்தை ஊக்குவித்து, அதில் தன்னிறைவு காணவேண்டுமென்பதில் அவ் வங்கி திடமாக உழைத்தது. இதற்காக மாவட்டந்தோறும் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, அதில் முதற் தரமான விவசாயிக்கு "விவசாய மன்னன்" பட்டமும், ஒரு வார காலத்துக்கு கொழும்பு ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் தங்க வசதியினையும் அந்நிறுவனம் செய்து கொடுத்திருந்தது.

ஒரு இலட்சம் ரூபா பணமும், விவசாய மன்னன் பட்டமும் ஒரு வார கால ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் தங்கும் அதிஷ்டமும் கிராமத்து வாசனையை முகர்ந்த கந்தசாமிக்கே கிடைத்திருந்தது, பணமும், பட்டமும் பெரிதாக கந்தசாமிக்குத் தெரியவில்லை. மாநகரில் சிறப்பாக ஒரு வார காலத்தை, அதுவும் தாஜ்சமுத்ராவில் களிக்கப் போகின்றோமே எனும் சந்தோசமே அவரிடம் மேலோங்கி நின்றது.

நிறுவனத்தாரின் அழைப்பை ஏற்று கொழும்பிற்கு வந்து ஹொட்டல் தாஜ்சமுத்ராவில் தங்கினார் கந்தசாமி. அங்கும் அவருக்கு அமோக வரவேற்பு, பாடசாலைக் கற்றலை சரிவரப் புசித்தமையினால் ஆங்கிலத்தில் தடங்கலின்றி பழக முடிந்தது. என்றாலும் கொழும்பு நாகரீகம் தெரியாத ஒன்றாகவே "விவசாய மன்னன்" கந்தசாமிக்குத் தென்பட்டது. கந்தசாமியின் கண்களுக்கு தாஜ்சமுத்ராவில் இருந்த அனைவரும் விசித்திரமானவர்களாகவே தென்பட்டனர்.

விடுதி முற்றத்தில் இருந்த புற்தரையில் அமர்ந்த வண்ணம் இயற்கையின் இரசனையை சுவைக்கலானார் கந்தசாமி, அவ்வேளையில் அவசரமாக சூ... கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், அருகில் இருந்த சலகூடத்தை நாடினார் கந்தசாமி.

அங்கேயுள்ள அறிவிப்புப் பலகையில் "பெண்கள்" எனக் காட்டப்பட்டிருந்தது, மறுபக்க வாசலில் எந்தப் பிரிவினருக்கானது என்று எந்தவித அறிவித்தலும் காணப்படவில்லை. கந்தசாமியின் நிலை தர்மசங்கடமாகி விட்டது, "இதுவும் பெண்கள் பகுதியாக இருக்குமோ...»» " என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றார், பாவம் அங்கேயும் பெண்கள் கூட்டம்.

நீளமாக வளர்ந்த கூந்தல், சிவப்பு நிறக் கவுண், காதிலே தோடு..... கந்தசாமிக்கு அதிர்ச்சி, மன்னிப்புக் கோரிவிட்டு பின்வாங்கினார். வந்த வழியே சென்று வாயில் காவலனிடம் "ஆண்களுக்கான சலகூடம் எங்குள்ளது" எனக் கேட்டார், காவலன் காட்டிய திசை , முன்னர் சென்று திரும்பிய சலகூடத்தையே காட்டியது, கௌரவப் பிரச்சனை காரணமாக எதுவுமே திரும்பப் பேச முடியாமல் அந்தத் திக்கை நோக்கி நடந்தார் கந்தசாமி.

சலகூட வாசலில் சிவப்பு அங்கியணிந்த குழுவினர் இசைக் கருவிகளைக் கையில் ஏந்திய வண்ணம் கூடி நின்றனர், அவர்களுக்கு அருகில் சென்று, சலகூட வாயிலை எட்டும் போது தான் கந்தசாமிக்கு புரிந்தது, இவர்கள் பெண்களல்ல கூந்தல் வளர்த்த, கடுக்கன் பூண்ட நாகரீமான ஆண்களென்பது, பாவம் நாகரீகம்.

( தினமுரசு வாரமலர் டிசம்பர் 21 – 27 , 1997 பத்திரிகையில் பிரசுரமானது )

www.vaanavarkhon.net.tc

கருத்துக்கள்

வெள்ளி, 30 ஜூலை, 2010

வாழ்க்கைத் தேர்வில் - கவிதை



வாழ்க்கைத் தேர்வில்...

(1995 பெப்ரவரி 1- 15 தேதி ஜனனி பத்திரிகையில் வெளிவந்த கவிதை)

உயர்தரம் கற்று

உத்தியோகம் பெற

படிபடியால் ஏறி

தேய்ந்தன கால்கள்!


ஆனால்

இன்னும் நான்

நண்பர்களுக்கு

தேர்வுக் குதிரையாய்!


அடித்தன

அவர்களுக்கு யோகம்

ஆனால்

இன்னமும் நான்!


எனது

நண்பர்களின்

புன்முறுவலுக்கு

அர்த்தம் காணாமல்....

www.vaanavarkhon.tk

கருத்துக்கள்

வெள்ளி, 23 ஜூலை, 2010

வயலோர நினைவுகள் - சிறுகதை



வயலோர நினைவுகள்


(ஒக்டோபர் 10-16, 1999 தினமுரசு வாரமலர் பத்திரிகையில் பிரசுரமான சிறுகதை)

மோட்டார் சைக்கிளை வீதியால் விரைவாகவும் ஓட்ட முடியுதில்ல, கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வேகத் தடையும் காணாக்குறைக்கு சோதனைச் சாவடிகளும்........ , மோட்டார் சைக்கிளை மெதுவாக உருட்டிச் சென்று எதிரே நிற்கும் ஆமிக்காரனிடம் அடையாள அட்டையைக் காண்பித்து, அவனின் சைகை கிடைக்கும் வரை காத்து நின்று, அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை முருகேசியையும் கூட்டிக் கொண்டு வயலுக்க போயிற்று வருவம். ஆத்தில குளிச்சி எவ்வளது நாளாயிற்று ?

அந்தப் பசுமையான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை, பசுமையான சூழல் கூடவே இருந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் தானே? அந்த வரிசையில் தான் நானும் இருக்கிறேனோ!

பச்சைப் பசேலென கண்ணுக்கு காட்சி தரும் வயல்வெளியில் தலையைக் குனிந்து காற்றின் சுருதி லயத்துக்கு ஏற்றபடி சாய்ந்தாடும் பொன்னிறமான நெற்கதிர்கள் மனதுக்கு எவ்வளவு நிம்மதியைத் தருகின்றன.

தென்றலுடன் கலந்து வரும் குளிரும், அந்த நேரத்தில் வரம்பில் நடக்கும் போது தடக்கி விழுந்து சேற்றைப் பூசிக் கொள்ளும் நினைவுகளும் விட்டபாடில்லை.

பாலனுக்கு இப்படியொரு கதி ஏற்படுமென்று தெரிந்திருந்தால் அவனைக் கூட்டிக் கொண்டு போகாமல் விட்டிருக்கலாம், அல்லது தென்னந்தோட்டத்துக்குள் இளநீர் குடிப்போமென்று போன எமக்கு களவாகக் கள்ளுக் குடிக்கும் ஆசை ஏற்பட்டு இருக்கக் கூடாது.

சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவனல்லவா பாலன்? இளநீர் கீழே விழுந்தால் உடைந்து விடுமென்று வாயினால் கவ்விக் கொண்டு இறங்கி வந்து பதமாக வெட்டித் தருவானே!

பதினைந்து வருசத்துக்கும் மேலாக வயலில் முல்லைக்காரனாக இருந்தாலும், நண்பனாகவே பழகியவன். கடவுள் இப்படியொரு திடீர் முடிவை எடுத்திருக்கக் கூடாது, இன்னும் எவ்வளவோ காலத்துக்கு வாழ வேண்டியவன், சின்ன வயதில் கலியாணம் செய்ததால் பொம்புளப் புள்ளைகள் மூணுக்குத் தகப்பன் அல்லவா பாலன்? அவன் என்னை ராசேந்திரன் எண்டு கூப்பிடும் குரலோசை அடிக்கடி வந்து போகின்றது.

"ஓசிக் கள்ளென்றபடியால கூடக் குடிக்காதயிங்க, தூக்கிச் சாத்த என்னால ஏலாது!" என்றெல்லாம் பல தடவ கூறியிருப்பானே, அவனுக்கா இந்தக் கதி!

கண்ணி வைத்துக் கொக்குப் பிடித்தெடுப்பதில் கில்லாடி அவனைத் தவிர வேறு ஆரையும் நான் பார்க்கவேயில்ல.

"மச்சான் கதைச்சிக் கொண்டிருங்க, அஞ்சு நிமிசத்தில வந்திருவன்" என நூலால் பின்னப்பட்ட கண்ணி வலைகளை எடுத்துச் சென்று கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கொக்குகளைப் பிடித்து உரித்தெடுத்து இறைச்சியாகக் கொண்டு வருவான் பாலன்.

"இப்படியே ஒண்டும் செய்யாமக் கதைச்சுக் கொண்டிருந்தா, பாலன் வந்தால் ஏசுவான்!" எனக் கூறி அடுப்பை மூட்டித் தேநீர் வைக்கத் தொடங்குவான் முருகேசு, அத்தோடு கறிக்குத் தேவையான உப்பு, கொச்சிக்காய்த் தூள், வெங்காயம் போன்றவற்றைத் தயார் படுத்தி வைத்திருப்பான்.

அந்த நேரத்தில் எனக்கும் முருகேசுக்கும் இடையே சிரிப்பும் கும்மாளமும் தாராளமாக வந்து போகும், இடையிடையே கேலிப் பேச்சுக்களும், ஊர்க் கதைகளும் எட்டிப் பார்க்கும், சிலவேளைகளில் காதல் கதைகளும் வந்து செல்லும், அதில் கட்டுக் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது.

இக் கதைவாக்கில் சூடேறி ஒருவரை ஒருவர் துரத்தியோடி, ஒட முடியாமல் வயலுக்குள்ளால் பாய்ந்து ஓடி விழுந்து, சகதியை உடலெல்லாம் பூசி, அருகிலிருக்கும் வாய்க்காலுக்குச் சென்று குளித்து விட்டு வருவது அடிக்கடி நிகழும் சம்பவம்.

கொக்கு வேட்டையை முடித்து, வயலின் வீடான பரணை நோக்கி பாலன் வரும் போது அங்கு அடுப்பு அணைந்து நெருப்பில்லாமல் கிடக்கும்.

கொண்டு வந்த இறைச்சியை தனது கையாலே துண்டு துண்டுகளாக வெட்டி சுவையாகச் சமைத்து, கறிச் சட்டியைப் பறனில் வைத்து விட்டு எங்களைத் தேடி வாய்க்காற் பக்கம் வருவான் பாலன்.

எங்களைக் கண்டதும் "டேய் ராசேந்திரன் அறிவு இல்லையாடா உங்களுக்கு, போன என்னைத் தேடிப் பார்ப்பம் எண்டு இல்லாம விளையாடிக் கொண்டிருக்கிறீங்க!"

எனக் கோபமாக முகத்தைக் காட்டியவாறு வாய்க்காலுக்குள் குதிப்பான் பாலன். குளித்து முடிந்ததும் பறனுக்கு வந்து விட்டால் பழையபடி சிரிப்புத் தொடங்கி விடும்.

மோட்டார் சைக்கிள் பையில் இருந்த போத்தலை வெளியே எடுத்த போது சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் பாலனும் முருகேசும். கொஞ்சம் கொஞ்சமாகப் பருகி நேரம் போனதே தெரியாமல் உள்ளே இருந்ததை மூவரும் முடித்து விட்டோம்.

வயலுக்குள் கண்ணாடிக் குவளை கிடையாது ஆனால் குவளைக்குப் பதிலாக நன்கு சீவிச் சுத்தம் செய்யப்பட்ட சிரட்டை, அதில் குடிப்பதென்றால் தனியொரு சுவை. "சியஸ்" சொல்லி பாலன் சிரட்டையில் தட்டுவானே அதை நினைத்தால் இப்போது அழுகை தான் வரும்.

பாலன் சமைத்த கொக்குக் கறி எவ்வளவு சுவையாக இருக்குதென்று பாலனைப் புகழ்ந்து கவிதை பாடினான் முருகேசு. முருகேசுக்குப் போதை தலைக்கேறினால் அங்கு கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் பஞ்சம் இருக்காது.

தண்ணீர் எடுப்பதற்கு வாய்க்காலுக்குச் சென்ற பாலனை, "பாலா பாலா ஓடி வா, இறைச்சிக் கறி சமைப்போம் ஓடி வா!" எனக் கேலியாக அழைத்துச் சிரிப்போம், அச் சந்தோசமான சூழலில் தவழ்ந்து வரும் தென்றல் எங்களைத் தாலாட்டி நித்திரைக்கு அழைத்துச் செல்லும்.

"ராசேந்திரன் எழும்புடா, தண்ணி அள்ளப் போன பாலனை இன்னும் காணல்ல, போய்ப் பார்த்திட்டு வருவம்!" எனக் கூறி என்னைத் தட்டி எழுப்பினான் முருகேசு.

பாலன் சென்ற வழியே போய்ப் பார்த்த போது, வரம்பு ஓரத்தில் விழுந்து உணர்வற்றுக் கிடந்தான் பாலன், அவனது முகம் சேற்றினுள் புதைந்து இருந்தது.

இருவருமாகச் சேர்ந்து பாலனைத் தூக்கி பாதை ஓரத்துக்குக் கொண்டு வந்த போது பாலனின் உயிர் அவன் உடலில் இருக்கவில்லை, அவனுடன் பழகிய வயலோர நினைவுகள் மட்டும் இடைவிடாமல் வந்து போகின்றது.

- யாவும் கற்பனை -



www.vaanavarkhon.tk

கருத்துக்கள்

பூச்சரம் Tamil Thiratti Thiratti.com Tamil Blog Aggregator More than a Blog Aggregator !!!####!!!¤¤¤!!!###!!! அந்தகார இருளில் ஒளிக் கீற்றைக் கொடுப்பவன் தான் அறிவாளி ! மாறாக இருளைச் சபித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் மட்டுமன்றி சோம்பேறியும் கூட !!

முந்திய படைப்புகள்

Related Posts with Thumbnails