செவ்வாய், 27 டிசம்பர், 2011
நண்பன் ஞானியின் 7 வது நினைவேந்தல்.
செவ்வாய், 8 நவம்பர், 2011
படுவான்கரை - சிறுகதை

"சாச்சோ......" தூரத்தில் சத்தம் கேட்டதும் வலையைத் தூக்கி தோளில் போட்டவாறு வெளியேறி சந்தியில் நின்று கொண்டிருந்த கும்புறுகந்தனைப் பார்த்து, "என்ன மச்சான் விளாவெட்டுவான்கந்தனும், சலவைக்கந்தனும் வரல்லயா?"
கும்புறுகந்தன் மீண்டுமொரு தரம் "சாச்சோ...." எனக் கூவியதும், தூரத்தே இரண்டு சத்தங்கள் கூ...., கூ........ வெனக் கேட்டன. "ஆ... துறயடியில நிக்கிறாங்க போலத் தெரியுது, போவம்....." என்றவாறு மாவிலங்கமுனைத் துறையடிக்கு சென்றனர்.
நான்கு பேரும் ஆற்றில் இறங்கி கறிக்கு மீன் பிடித்து விட்டுத் திரும்பினர். "சாச்சா நீங்க முடிஞ்சி தந்த அத்தாங்கு பிஞ்சி போச்சி, புதுசொண்டு முடிஞ்சு தரணும்....." குறத்திகந்தனைப் பார்த்துக் கேட்டான் கும்புறுகந்தன். "வயலுக்குப் போற வேலயும் இரிக்கி, நேரமிருந்தா செஞ்சி தாறன்."
"வெள்ளாம வட்ட வேலயெல்லாம் முடிஞ்சு யோயித்து, மாடுகளைப் பாக்கிற வேல தான் இரிக்கி, முதியான் நாம்பனுகளை பாத்து விக்கணும், நாகுகளுக்குக் குறி வெய்க்கவுமில்ல, பஞ்சாங்கத்தில நல்லதா ஒரு நாளப் பாத்து மாடுகளுக்கு குறி வெச்சி வந்திரணும், பொறகு மாடுகள் மாறுப்பட்டா ஒண்டுஞ் செய்யேலது, நான் காலயடிக்குப் போகப் போறன் வாறண்டா வாங்க...." என விளாவெட்டுவான்கந்தன் குறத்திகந்தனைப் பார்த்து கேட்டான்.
"மாட்டுக்கு குறி வெய்க்க நல்ல நாளாம் இண்டைக்கு, பூரண எண்டதால நானும் காலயடிக்குப் போய் மாட்டுக்கு குறி வெய்க்கப் போறன், பால இண்டைக்கு பால்காறனிட்ட குடுத்தனுப்புறன், கொண்டு வாற பாலக் காச்சி பெரிய சட்டியில ஊத்தி உறையப் போட்டு வை நாகம்மா, நம்மட ஆசுபத்திரி டாக்குத்தர் வேறிடத்துக்கு மாறிப் போறார், நாமும் நன்றிக் கடனுக்கு ஏதாவது குடுக்கத்தானே வேணும்?, தயிர்ச் சட்டியக் குடுப்பம்."
"நேற்றய தயிரெல்லாத்தையும் முல்லக்காரன்ட பொஞ்சாதிட்ட குடுத்து காத்தாங்குடியில வித்திட்டு வரச் சொல்லல்லையா...." என்று குறத்திகந்தன் மனைவியிடம் கேட்கலானான். "..... நேற்று ஊர்காவல் படைய சுட்டதால அங்கிட்டுப் பக்கம் ஆருமே போகல்ல, அது தான் தயிரெல்லாம் அப்படியே கிடக்கு" என்றாள் நாகம்மா.
"தலயில வெச்சி காத்தாங்குடிக்கு தூக்கி போறண்டா எவ்வளவு கக்கிசம், பாவம் பொன்னம்மா நேத்து களுவாஞ்சிக்குடிக்கு போய், போகேலாம திரும்பி வந்திட்டாள், பஸ் ஓட்டமும் இல்லையாம், கடையெல்லாம் அடச்சிக் கிடக்காம், ரோட்டெல்லாம் ஆமிக்காரண்டா வாகனம் தான் போகுதாம்"
"கொத்தியாவலயில இருந்து மாவிலங்குமுனைத் துறையால அக்கரப்பட்டு மரம் கொண்டு போக நம்மட அகமது காக்காட மகன் இஸ்மாயில் வருவான். அவன் இண்டைக்கு கும்புறுகந்தன்ட ஊட்டுக்குப் போவான், அவனக் கூப்பிட்டு இரிக்கிற தயிரெல்லாத்தயும் குடுத்து விடு. அவன் வரல்லயெண்டால், ஏறாவூரில இருந்து புல்லுப் புடுங்க இந்தப் பக்கம் வாற முஸ்லிம் பொண்டுகளிட்ட குடுத்து விடு நாகம்மா, பாவம் அதுகள் கொண்டு போய்ச் சாப்பிடட்டும், நம்மட ஆக்களுக்குக் குடுத்தா வாங்கவும் மாட்டாங்க, அதுதான் அவயளிட்ட இரிக்கிதே!"
"துறையடிப் பக்கம் வெடிச் சத்தம் கேக்குது!, தண்ணிச் சோத்தையும் தயிரையும் எடு நாகம்மா சாப்பிடுவம்." தண்ணீர்ச் செம்பை எடுத்து கையையும் வாயையும் கழுவியவாறு "சாப்பிட்டுத்து என்ன வெடிச் சத்தமெண்டு பாத்திட்டு வாறன் புள்ள." சோற்றைப் பிசைந்து உண்டு கொண்டிருந்தான் குறத்திகந்தன்.
"சாச்சா இரிக்காரா?" கும்புறுகந்தனின் சத்தம் வேலியோரப் பக்கம் கேட்கவே, "படலையில் இரிக்கிற உழலைய எடுத்து ஓரமா வெச்சிற்று உள்ள வாவன்!" பதட்டமடைந்தவனாக உள்ளே வந்த கும்புறுகந்தன் "மண்முனைத் துறையடியில ஊராக்கள்ற உடுப்புகளத் தோய்த்துக் கொண்டிருந்த
சலவைக்கந்தனை சந்தேகத்தில சுட்டுட்டாங்களாம், ஆசுபத்திரிக்கு ஜீப்பில கொண்டு போறாங்க, நாமளும் போய்ப் பாத்திட்டு நேரத்துக்கு வந்திடுவம்."
(கிழக்கு மாகாணத்தின் படுவான்கரை பகுதியின் பேச்சு வழக்கினைத் தழுவி எழுதப்பட்டது.)
பிரசுரமான திகதி: தினமுரசு வாரமலர் ஏப்ரல் 12 - 18, 1998.

www.vaanavarkhon.net.tc
கருத்துக்கள்
செவ்வாய், 28 ஜூன், 2011
ஊரோடி - கவிதை

ஊரோடி
ஊரவர் பலரின் உயிரைக்
காவு கொண்டவன் தான்
அறங்காவற்குழுவின்
காவலன்!
ஊரின் அழிவுக்கு
வித்திட்டவன் ஊர்தியில் ஊர்வலம்
உயிரைக் கையில் பிடித்தவன்
நடைப்பிணம்!
பல்லக்குத் தேடும் பரதேசி
உதிரக் கறையை அலசி
காற்றுவாக்கில் ஆண்டியாய்
ஊர்உலா!
www.vaanavarkhon.net.tc
கருத்துக்கள்
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
கருங்கூந்தலும் கடுக்கனும் - சிறுகதை

(தினமுரசு வாரமலர் டிசம்பர் 21 – 27 , 1997 பத்திரிகையில் பிரசுரமானது)
சிறந்த விவசாயிக்கான பரிசாக ஒரு இலட்சம் ரூபா பணத்தினை வழங்க வங்கியொன்று முன்வந்தது. விவசாயத்தை ஊக்குவித்து, அதில் தன்னிறைவு காணவேண்டுமென்பதில் அவ் வங்கி திடமாக உழைத்தது. இதற்காக மாவட்டந்தோறும் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, அதில் முதற் தரமான விவசாயிக்கு "விவசாய மன்னன்" பட்டமும், ஒரு வார காலத்துக்கு கொழும்பு ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் தங்க வசதியினையும் அந்நிறுவனம் செய்து கொடுத்திருந்தது.
ஒரு இலட்சம் ரூபா பணமும், விவசாய மன்னன் பட்டமும் ஒரு வார கால ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் தங்கும் அதிஷ்டமும் கிராமத்து வாசனையை முகர்ந்த கந்தசாமிக்கே கிடைத்திருந்தது, பணமும், பட்டமும் பெரிதாக கந்தசாமிக்குத் தெரியவில்லை. மாநகரில் சிறப்பாக ஒரு வார காலத்தை, அதுவும் தாஜ்சமுத்ராவில் களிக்கப் போகின்றோமே எனும் சந்தோசமே அவரிடம் மேலோங்கி நின்றது.
நிறுவனத்தாரின் அழைப்பை ஏற்று கொழும்பிற்கு வந்து ஹொட்டல் தாஜ்சமுத்ராவில் தங்கினார் கந்தசாமி. அங்கும் அவருக்கு அமோக வரவேற்பு, பாடசாலைக் கற்றலை சரிவரப் புசித்தமையினால் ஆங்கிலத்தில் தடங்கலின்றி பழக முடிந்தது. என்றாலும் கொழும்பு நாகரீகம் தெரியாத ஒன்றாகவே "விவசாய மன்னன்" கந்தசாமிக்குத் தென்பட்டது. கந்தசாமியின் கண்களுக்கு தாஜ்சமுத்ராவில் இருந்த அனைவரும் விசித்திரமானவர்களாகவே தென்பட்டனர்.
விடுதி முற்றத்தில் இருந்த புற்தரையில் அமர்ந்த வண்ணம் இயற்கையின் இரசனையை சுவைக்கலானார் கந்தசாமி, அவ்வேளையில் அவசரமாக சூ... கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், அருகில் இருந்த சலகூடத்தை நாடினார் கந்தசாமி.
அங்கேயுள்ள அறிவிப்புப் பலகையில் "பெண்கள்" எனக் காட்டப்பட்டிருந்தது, மறுபக்க வாசலில் எந்தப் பிரிவினருக்கானது என்று எந்தவித அறிவித்தலும் காணப்படவில்லை. கந்தசாமியின் நிலை தர்மசங்கடமாகி விட்டது, "இதுவும் பெண்கள் பகுதியாக இருக்குமோ...»» " என்றாலும் துணிவை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றார், பாவம் அங்கேயும் பெண்கள் கூட்டம்.
நீளமாக வளர்ந்த கூந்தல், சிவப்பு நிறக் கவுண், காதிலே தோடு..... கந்தசாமிக்கு அதிர்ச்சி, மன்னிப்புக் கோரிவிட்டு பின்வாங்கினார். வந்த வழியே சென்று வாயில் காவலனிடம் "ஆண்களுக்கான சலகூடம் எங்குள்ளது" எனக் கேட்டார், காவலன் காட்டிய திசை , முன்னர் சென்று திரும்பிய சலகூடத்தையே காட்டியது, கௌரவப் பிரச்சனை காரணமாக எதுவுமே திரும்பப் பேச முடியாமல் அந்தத் திக்கை நோக்கி நடந்தார் கந்தசாமி.
சலகூட வாசலில் சிவப்பு அங்கியணிந்த குழுவினர் இசைக் கருவிகளைக் கையில் ஏந்திய வண்ணம் கூடி நின்றனர், அவர்களுக்கு அருகில் சென்று, சலகூட வாயிலை எட்டும் போது தான் கந்தசாமிக்கு புரிந்தது, இவர்கள் பெண்களல்ல கூந்தல் வளர்த்த, கடுக்கன் பூண்ட நாகரீமான ஆண்களென்பது, பாவம் நாகரீகம்.
( தினமுரசு வாரமலர் டிசம்பர் 21 – 27 , 1997 பத்திரிகையில் பிரசுரமானது )
www.vaanavarkhon.net.tc
கருத்துக்கள்
வெள்ளி, 30 ஜூலை, 2010
வாழ்க்கைத் தேர்வில் - கவிதை

வாழ்க்கைத் தேர்வில்...
(1995 பெப்ரவரி 1- 15 தேதி ஜனனி பத்திரிகையில் வெளிவந்த கவிதை)
உயர்தரம் கற்று
உத்தியோகம் பெற
படிபடியால் ஏறி
தேய்ந்தன கால்கள்!
ஆனால்
இன்னும் நான்
நண்பர்களுக்கு
தேர்வுக் குதிரையாய்!
அடித்தன
அவர்களுக்கு யோகம்
ஆனால்
இன்னமும் நான்!
எனது
நண்பர்களின்
புன்முறுவலுக்கு
அர்த்தம் காணாமல்....
www.vaanavarkhon.tk
கருத்துக்கள்
வெள்ளி, 23 ஜூலை, 2010
வயலோர நினைவுகள் - சிறுகதை

வயலோர நினைவுகள்
(ஒக்டோபர் 10-16, 1999 தினமுரசு வாரமலர் பத்திரிகையில் பிரசுரமான சிறுகதை)
மோட்டார் சைக்கிளை வீதியால் விரைவாகவும் ஓட்ட முடியுதில்ல, கண்ட கண்ட இடத்தில் எல்லாம் வேகத் தடையும் காணாக்குறைக்கு சோதனைச் சாவடிகளும்........ , மோட்டார் சைக்கிளை மெதுவாக உருட்டிச் சென்று எதிரே நிற்கும் ஆமிக்காரனிடம் அடையாள அட்டையைக் காண்பித்து, அவனின் சைகை கிடைக்கும் வரை காத்து நின்று, அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தேன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முருகேசியையும் கூட்டிக் கொண்டு வயலுக்க போயிற்று வருவம். ஆத்தில குளிச்சி எவ்வளது நாளாயிற்று ?
அந்தப் பசுமையான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை, பசுமையான சூழல் கூடவே இருந்தும் அனுபவிக்கத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் தானே? அந்த வரிசையில் தான் நானும் இருக்கிறேனோ!
பச்சைப் பசேலென கண்ணுக்கு காட்சி தரும் வயல்வெளியில் தலையைக் குனிந்து காற்றின் சுருதி லயத்துக்கு ஏற்றபடி சாய்ந்தாடும் பொன்னிறமான நெற்கதிர்கள் மனதுக்கு எவ்வளவு நிம்மதியைத் தருகின்றன.
தென்றலுடன் கலந்து வரும் குளிரும், அந்த நேரத்தில் வரம்பில் நடக்கும் போது தடக்கி விழுந்து சேற்றைப் பூசிக் கொள்ளும் நினைவுகளும் விட்டபாடில்லை.
பாலனுக்கு இப்படியொரு கதி ஏற்படுமென்று தெரிந்திருந்தால் அவனைக் கூட்டிக் கொண்டு போகாமல் விட்டிருக்கலாம், அல்லது தென்னந்தோட்டத்துக்குள் இளநீர் குடிப்போமென்று போன எமக்கு களவாகக் கள்ளுக் குடிக்கும் ஆசை ஏற்பட்டு இருக்கக் கூடாது.
சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவனல்லவா பாலன்? இளநீர் கீழே விழுந்தால் உடைந்து விடுமென்று வாயினால் கவ்விக் கொண்டு இறங்கி வந்து பதமாக வெட்டித் தருவானே!
பதினைந்து வருசத்துக்கும் மேலாக வயலில் முல்லைக்காரனாக இருந்தாலும், நண்பனாகவே பழகியவன். கடவுள் இப்படியொரு திடீர் முடிவை எடுத்திருக்கக் கூடாது, இன்னும் எவ்வளவோ காலத்துக்கு வாழ வேண்டியவன், சின்ன வயதில் கலியாணம் செய்ததால் பொம்புளப் புள்ளைகள் மூணுக்குத் தகப்பன் அல்லவா பாலன்? அவன் என்னை ராசேந்திரன் எண்டு கூப்பிடும் குரலோசை அடிக்கடி வந்து போகின்றது.
"ஓசிக் கள்ளென்றபடியால கூடக் குடிக்காதயிங்க, தூக்கிச் சாத்த என்னால ஏலாது!" என்றெல்லாம் பல தடவ கூறியிருப்பானே, அவனுக்கா இந்தக் கதி!
கண்ணி வைத்துக் கொக்குப் பிடித்தெடுப்பதில் கில்லாடி அவனைத் தவிர வேறு ஆரையும் நான் பார்க்கவேயில்ல.
"மச்சான் கதைச்சிக் கொண்டிருங்க, அஞ்சு நிமிசத்தில வந்திருவன்" என நூலால் பின்னப்பட்ட கண்ணி வலைகளை எடுத்துச் சென்று கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கொக்குகளைப் பிடித்து உரித்தெடுத்து இறைச்சியாகக் கொண்டு வருவான் பாலன்.
"இப்படியே ஒண்டும் செய்யாமக் கதைச்சுக் கொண்டிருந்தா, பாலன் வந்தால் ஏசுவான்!" எனக் கூறி அடுப்பை மூட்டித் தேநீர் வைக்கத் தொடங்குவான் முருகேசு, அத்தோடு கறிக்குத் தேவையான உப்பு, கொச்சிக்காய்த் தூள், வெங்காயம் போன்றவற்றைத் தயார் படுத்தி வைத்திருப்பான்.
அந்த நேரத்தில் எனக்கும் முருகேசுக்கும் இடையே சிரிப்பும் கும்மாளமும் தாராளமாக வந்து போகும், இடையிடையே கேலிப் பேச்சுக்களும், ஊர்க் கதைகளும் எட்டிப் பார்க்கும், சிலவேளைகளில் காதல் கதைகளும் வந்து செல்லும், அதில் கட்டுக் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது.
இக் கதைவாக்கில் சூடேறி ஒருவரை ஒருவர் துரத்தியோடி, ஒட முடியாமல் வயலுக்குள்ளால் பாய்ந்து ஓடி விழுந்து, சகதியை உடலெல்லாம் பூசி, அருகிலிருக்கும் வாய்க்காலுக்குச் சென்று குளித்து விட்டு வருவது அடிக்கடி நிகழும் சம்பவம்.
கொக்கு வேட்டையை முடித்து, வயலின் வீடான பரணை நோக்கி பாலன் வரும் போது அங்கு அடுப்பு அணைந்து நெருப்பில்லாமல் கிடக்கும்.
கொண்டு வந்த இறைச்சியை தனது கையாலே துண்டு துண்டுகளாக வெட்டி சுவையாகச் சமைத்து, கறிச் சட்டியைப் பறனில் வைத்து விட்டு எங்களைத் தேடி வாய்க்காற் பக்கம் வருவான் பாலன்.
எங்களைக் கண்டதும் "டேய் ராசேந்திரன் அறிவு இல்லையாடா உங்களுக்கு, போன என்னைத் தேடிப் பார்ப்பம் எண்டு இல்லாம விளையாடிக் கொண்டிருக்கிறீங்க!"
எனக் கோபமாக முகத்தைக் காட்டியவாறு வாய்க்காலுக்குள் குதிப்பான் பாலன். குளித்து முடிந்ததும் பறனுக்கு வந்து விட்டால் பழையபடி சிரிப்புத் தொடங்கி விடும்.
மோட்டார் சைக்கிள் பையில் இருந்த போத்தலை வெளியே எடுத்த போது சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் பாலனும் முருகேசும். கொஞ்சம் கொஞ்சமாகப் பருகி நேரம் போனதே தெரியாமல் உள்ளே இருந்ததை மூவரும் முடித்து விட்டோம்.
வயலுக்குள் கண்ணாடிக் குவளை கிடையாது ஆனால் குவளைக்குப் பதிலாக நன்கு சீவிச் சுத்தம் செய்யப்பட்ட சிரட்டை, அதில் குடிப்பதென்றால் தனியொரு சுவை. "சியஸ்" சொல்லி பாலன் சிரட்டையில் தட்டுவானே அதை நினைத்தால் இப்போது அழுகை தான் வரும்.
பாலன் சமைத்த கொக்குக் கறி எவ்வளவு சுவையாக இருக்குதென்று பாலனைப் புகழ்ந்து கவிதை பாடினான் முருகேசு. முருகேசுக்குப் போதை தலைக்கேறினால் அங்கு கவிதைகளுக்கும் பாடல்களுக்கும் பஞ்சம் இருக்காது.
தண்ணீர் எடுப்பதற்கு வாய்க்காலுக்குச் சென்ற பாலனை, "பாலா பாலா ஓடி வா, இறைச்சிக் கறி சமைப்போம் ஓடி வா!" எனக் கேலியாக அழைத்துச் சிரிப்போம், அச் சந்தோசமான சூழலில் தவழ்ந்து வரும் தென்றல் எங்களைத் தாலாட்டி நித்திரைக்கு அழைத்துச் செல்லும்.
"ராசேந்திரன் எழும்புடா, தண்ணி அள்ளப் போன பாலனை இன்னும் காணல்ல, போய்ப் பார்த்திட்டு வருவம்!" எனக் கூறி என்னைத் தட்டி எழுப்பினான் முருகேசு.
பாலன் சென்ற வழியே போய்ப் பார்த்த போது, வரம்பு ஓரத்தில் விழுந்து உணர்வற்றுக் கிடந்தான் பாலன், அவனது முகம் சேற்றினுள் புதைந்து இருந்தது.
இருவருமாகச் சேர்ந்து பாலனைத் தூக்கி பாதை ஓரத்துக்குக் கொண்டு வந்த போது பாலனின் உயிர் அவன் உடலில் இருக்கவில்லை, அவனுடன் பழகிய வயலோர நினைவுகள் மட்டும் இடைவிடாமல் வந்து போகின்றது.
- யாவும் கற்பனை -
www.vaanavarkhon.tk
கருத்துக்கள்
சனி, 26 டிசம்பர், 2009
அகாலவேளை - சிறுகதை

வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் வசந்தி, கம்பீரமான அழகான கணவனையும் ஆசைக்கு ஒரு மகனையும் ஒரு மகளையும் கொண்ட இனிமையான குடும்பம், சொற்ப காலத்திற்குள் அழகான நவீன வீட்டை நிர்மாணித்து வசந்தியின் மீதுள்ள காதலினால் அவ் வீட்டுக்கு "வசந்த மாளிகை" என நாமமும் சூட்டினான் வசந்தியின் கணவன் வரதன்.
பாடசாலையில் ஒன்றாகப் படித்த காலத்தில் இருந்து இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாகி களியாணத்தில் முடிந்தது, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டு சிறந்த பாதிரியார்களின் அசீர்வாதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது தான் வரதன் வசந்தி திருமணம்.
திருமணத்துக்கு வருபவர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக இன்னிசைக் கச்சேரியும் உண்ணுவதற்கு சுவையான சிறந்த சிற்றுண்டி மற்றும் உணவுகளெல்லாம் நினைக்கும் போது இப்போதும் நாவூறுகிறது.
"ம்ம்…… எழும்புங்கோ சேர்ச்சுக்குப் போக வேணும்" கணவனைத் தட்டி எழுப்பி அவனது கன்னத்தை மெதுவாக வருடி விட்டு குளியல் அறைக்குள் சென்றாள் வசந்தி. குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறதே, நான் தான் எழும்ப பிந்தி விட்டேனோ, அவசரமாக குளித்து விட்டு குசினிக்குள் சென்று தேநீருடன் வெளியே வந்த போது குழந்தைகளும் கணவரும் புத்தாடை அணிந்து அழகாக இருந்தனர், உண்மையில் அந்த பிரமனுக்கே நன்றி சொல்ல வேண்டும்.
நேற்றைய இரவு நத்தார் தினப் பூசைக்குப் போட்ட உடுப்பை அணிந்து வசந்தியும் குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது.
பூசை ஆரம்பித்து பங்குத் தந்தையினால் அப்பம் பங்கிடப்பட்ட அவ்வேளையில் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை நினைத்து கைகளை அகல விரித்து கண்களை மூடி மக்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபடலாயினர், மயான அமைதி நிலவியது அத் தேவாலயத்தில்.
அவ் அமைதி நேரத்தில் பாரிய இரைச்சல் வெளியே கேட்டது, அனைவரும் திரும்பி வீதியைப் பார்க்க, ஊரவர்கள் எல்லோரும் அழுத வண்ணம் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
"கடல் ஊருக்குள்ள வந்திற்று ஓடுங்கோ, ஓடுங்கோ" என அழுதவாறு மக்கள் உடுத்த உடையுடன் ஓடிக்கொண்டிருந்தனர், எதையும் சிந்திக்க நேரம் இருக்கவில்லை.
"வசந்தி கெதியா வா என கணவன் அழைத்ததும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகளை மறு கரத்தில் பிடித்தவாறு குறு நடையாய் வரதனின் பின்னால் வெளியே செனறாள், தெருவில் கால் வைக்கவே இடமில்லை சன நெரிசல் அளவுக்கு அதிகமாக இருந்தது, சைக்கிளில் ஏறி மிதிக்க தயாராக காத்திருந்தார் வரதன்.
நானும் மகனும் பின்னால் இருக்கும் கரியரிலும், மகள் முன்னாலும் இருக்க சைக்கிள் மெதுவாக நகர்ந்தது, வசந்தியின் வாயில் இருந்து யேசுவே, யேசுவே……. எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது, அந் நேரம் பிள்ளையாரே என்றும் முருகா என்றும் ஓடிவரும் ஒவ்வொருவரும் தலையிலடித்து அழுது கொண்டு ஓடுவது இரைச்சலுடன் இரைச்சலாய்க் கேட்டது, பின்னால் திரும்பிப் பார்த்தேன்.
எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை, கடல் மலை போல் எங்களைத் துரத்திக் கொண்டே வந்தது, "அப்பா சைக்கிளை கெதியா மிதியுங்கோ, கடல் பின்னால் வந்துட்டுது, கடவுளே" எனச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் ... .... ... கடல் எங்களை மூடி விட்டது, கையில் இருந்த எனது குழந்தையை ஒரு கையாலும் மறு கையால் கணவனையும் இறுகப் பிடித்துக் கொண்டேன், எங்களுக்குப் பின்னாய் ஓடி வந்தவர்களின் ஒரு பகுதி கடலலையிலே அடிபட்டுச் செல்வதை உணரத்தக்கதாக இருந்தது.
குழந்தையையும் கணவனையும் இறுகப் பிடித்திருந்த கை நழுவி விட்டதன் பின் நடந்தது எதுவுமே வசந்திக்குத் தெரியாது. கடலலை வசந்தியை தூரத்தே கொண்டு போட்டுச் சென்றது.
தலையிலும் காலிலும் பலத்த வெட்டுக்காயம், அதைப்பற்றி சிந்திக்காமல், அருகே உயிர் தப்பிக் காணப்பட்டவர்களிடையே கணவனையும் குழந்தைகளையும் தேடலானாள், அவர்களைக் காணாததால் கண்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள். எல்லோரும் பதில் சொல்லக் கூடிய நிலையில் இல்லை, மீண்டும் சுனாமி வந்து விடுமோ எனும் அச்சத்தில் அவசர அவசரமாக கையில் கிடைத்தவற்றுடன் ஓடிக் கொண்டிருந்தனர்.
வைத்தியசாலையில் காயப்பட்ட சிலரையும் இறந்தவர்கள் பலரையும் வைத்திருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்த்த போது மகள் காயத்துடன் அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தாள், மனம் சற்று ஆறுதலடைய அன்புக் கணவனையும் ஆசை மகனையும் தேடினாள் வசந்தி, காயப்பட்டவர்களின் பகுதியில் காணப்படாததால் மனதைத் தேற்றிக் கொண்டு மரணித்தவர்களின் பகுதிக்கு ஜடமாகச் சென்றாள், அவளது உள் மனமோ கடவுளே எனக்கு பிரிவு வரக்கூடாது, எனது கணவனும் மகனும் உயிரோடு இருக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தது.
மனித உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒழுங்கற்றுப் போடப்பட்டிருந்தது, இந்த உடலங்களுக்கு மத்தியில் வரதனையும் குழந்தையையும் எப்படித் தேடுவாள் வசந்தி, அவளும் மெல்லிய மனம் கொண்ட பெண் தானே, மனதைக் கல்லாக்கிக் கொண்டு கிடத்தப் பட்டிருந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டி தனது உறவுகளைத் தேடினாள். முகம் சிதைந்த நிலையில் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கொண்டு வரதனை அடையாளம் கண்டு ஓவென்று கத்தினாள், மகனின் உடலத்தைக் காணவே இல்லை.
கண்ணீர் அவளையும் மீறி ஓடிக் கொண்டிருந்தது, பைத்தியம் பிடித்தவள் போலானாள், வசந்திக்கு அனுதாபம் தெரிவிக்க யாருமே இல்லை, ஏனையோர்களும் வசந்தியைப் போல் தங்களுக்குத் தேவையானவர்களை அழுதழுது தேடிக் கொண்டிருந்தனர், வசந்தி மனதைத் திடப் படுத்திக் கொண்டாள், தனது இரு கைகளாலும் கண்களைத் துடைத்து விட்டு கணவனின் உயிரற்ற சடலத்தை வாரித் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
மரண வீட்டுக் கிரியை செய்ய நேரமின்றி தனி ஒருத்தியினால் துணிச்சலாக வரதனின் பூவுடல் அவசர அவசரமாக தெரியாத ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது, இந்தச் சூழலில் மற்றவர்களும் தங்களது இறந்த உறவுகளை கூட்டமாகவும், தனியாகவும் விதைத்துக் கொண்டிருந்தார்கள், நேரமின்மையால் பிரேதங்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு புதைகுழியில் ஒன்றாக கொட்டப்பட்டு மணலால் மூடப்பட்ட சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தது.
கணவனின் இழப்பின் பின் வாழ வழி தெரியாமல் திக்குமுக்காடி நிற்கும் வசந்திக்கு துன்ப துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, அழகியான வசந்திக்கு உறவு என்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரமே தான், வசதியாக வாழ்ந்த அன்பான குடும்பம் சுனாமியால் தாக்குண்டு சீரழிந்து நிற்கின்றது, குடிசை வாழ்க்கை, பொது மலசல கூடம், பொதுக் கிணறு போன்றவற்றுக்குப் பழக்கப் படுத்திக் கொண்டாள் வசந்தி.
அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரணப் பொருட்களை வாங்கவெனச் செல்லும் போதும் வசந்தியை ஆண் வெறியர்கள் சிலர் சீண்டிப் பார்க்கவும் தவறவில்லை, வக்கிரம் கொண்டவர்களின் காமப் பார்வையில் இருந்து தப்புவதற்காக வசந்தி படும்பாடு சொல்லியடங்காது.
இளம் பெண்ணான வசந்தி விதவையாக இருப்பது பெண் பித்தர்களுக்கு சக்தியூட்டுவதாகவே அமைகின்றது, சிநேகிதம் பிடிக்கவென எத்தனையோ பேர் பின்னால் அலைவது வசந்திக்குத் தெரியாததல்ல.
அவளின் சிந்தனை எல்லாம் காணாமல் போன தனது ஆண் குழந்தையையும், அன்புக் கணவனைப் பற்றியதுமே, வேற்றுச் சிந்தனைக்கு அவளின் மனம் தாவவில்லை, சந்தோசமாக குறைகள் ஏதுமின்றி தன்னையையும் குழந்தைகளையும் வைத்து பாதுகாத்த கணவன் வரதனை நினைக்காத நாளே இல்லை எனலாம், கடல் துரத்தி வந்த அந்த அகால வேளையிலும் எங்கள் உயிரைப் பாதுகாக்க வரதன் பட்ட அவஸ்த்தையை நினைத்து நினைத்து அவளது மனம் படும் கோரத்தை விபரிக்க முடியாது.
"நேரம் பதினொரு மணியாகிற்று வாங்க அம்மா நித்திரை கொள்ளுவம்", மகள் அருகில் வந்து தாயின் கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்து அழைத்துச் செல்வாள் நித்திரைக்கு, இது சுனாமி அவளுக்கு கொடுத்துச் சென்ற பரிசில், தினமும் நிகழும் நிகழ்வு இது, அவளது கண்கள் என்ன கடலா,.
மகள் மூன்றாம் தரத்தில் பாடம் படிக்கிறாள், அகதிமுகாமில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தான் அவளது பாடசாலை, வகுப்பில் முதலாம் பிள்ளையும் அவளே. வசந்திக்கு சொந்தமென்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரம் தான், அவளை நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாகப் பார்க்க வேண்டுமென்பது வசந்தியின் தற்போதைய இலட்சியம்.
காலையில் மகளை குளிக்க வைத்து சுத்தமான ஆடை அணிவித்து அயலில் உள்ள ஏனைய பிள்ளைகளுடன் மகளையும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள் வசந்தி.
வசந்தி அண்டி.... பக்கத்து குடிசையில் வசிக்கும் அன்னம்மாவின் மகள் கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து வினாவியதைத் தொடர்ந்து மயக்கமுற்றாள் வசந்தி, இடி மேல் இடி அவளது தலையிலே விழுவதாக நினைத்தாள், பாடசாலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பும் போது தெருவால் வந்த மோட்டார்சைக்கிளில் மோதுண்டு காயப்பட்டு பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட செய்தி மேலும் அவளைப் பாதித்தது!
பஸ் போக்குவரத்து சீரில்லாத இக் கிராமத்தில் இருந்து நினைத்தவுடனே நகரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு போய் வருவதென்பது இலேசுப்பட்ட காரியமா, அழுதாள் விடியும் வரையும் அழுதாள். சேவல் கூவுகின்றது, மாட்டு வண்டியொன்று கடவென்று போகும் சத்தமும் கேட்கிறது, அகதிக் குடிசைகளுக்கு பொழுது விடிந்ததை தினமும் பறைசாற்றும் கடிகாரங்கள் இவை. அழுதழுது கண்கள் விறைத்துப் போய் நித்திரை இல்லாமல் இருந்த வசந்தி, எழும்பி அடுப்படிக்குச் சென்று கரித்துண்டொன்றை வாயிலிட்டு பல்லை மினுக்கி, முகம் கழுவி வெளியே வந்து அடிவானத்திலுள்ள விடிவெள்ளியைப் பார்த்து மீண்டும் ஒருமுறை நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அருமை மகளைப் பார்க்க போய்க் கொண்டிருக்கிறாள் தெருவை நோக்கி....
(கடற்கோள் பேரனர்த்ததில் மரணித்த எனது ஆத்ம நண்பன் அ.ஞானேந்திரன் குடும்பத்தினருக்கு இச் சிறுகதை சமர்ப்பணம்)
www.vaanavarkoon.tk